Wednesday, October 13, 2010

இந்தியாவின் தங்க மங்கை தீபிகா குமாரி

காமன்வெல்த் போட்டிகள் கண்டெடுத்த முத்துகளில் முதலாவதாக நம் கண்முன் வந்து நிற்கிறார், ஏழைத் தந்தையின் தங்க மகள் தீபிகா குமாரி!
வில்வித்தையில் இரண்டு தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றிச் சாதித்துள்ள தீபிகாவின் வயது 16.

தனிநபர் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்த தீபிகா, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
ராஞ்சியிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள சிறு கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்கும் இந்தப் புயலின் தந்தை ஷிவ்நாராயண் மஹாதோ, ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர். உள்ளூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நர்ஸாக பணியாற்றுக்கிறார், தாயார் கீதா.
தனது குடும்பத்தின் ஏழ்மைச் சூழலையும் தாண்டி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பதன் மூலம் இந்தியாவின் ஒலிம்பிக் கனவுப் பட்டியலுக்கு வலு சேர்க்கிறார்.
"தீபிகா தன்னோட லட்சியத்தில் உறுதியா இருந்தாள். சின்ன வயசுல மரத்தில் மாங்காய்களை கல்லால் அடிச்சு தான் பயிற்சி எடுத்துக்கிட்டா. எப்போவாவது தான் அவளின் குறி தப்பும். ஆரம்பத்துல அவளுக்கு பயிற்சிகான வசதியையோ, உபகரணங்களையோ எங்களால வாங்கிக் கொடுக்க முடியல. அவளே கையால செஞ்ச மூங்கில் வில்லையும், அம்பையும் வெச்சு தான் பயிற்சி எடுத்துக்கிட்டா.
எங்களால முழுசா சப்போர்ட் பண்ண முடியலன்னாலும், குடும்ப பட்ஜெட்டை கொஞ்சம் குறைச்சிகிட்டு அவளோட பயிற்சிக்கு உதவினோம். எங்களோட வறுமையையெல்லாம் தாண்டி, அவளோட வெறி தான் இந்தப் பதக்கத்தை வாங்கி கொடுத்திருக்கு. ஆனா, தீபிகாவோட லட்சியமே ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதுதான்," என்று பெருமிதத்துடன் தன் மகள் கடந்து வந்த பாதையைச் சொல்கிறார் தீபிகாவின் தாயார் கீதா.

No comments:

Post a Comment